செய்திகள்
பருவநிலை மாற்றத்திற்கு முன்னுரிமை... ஸ்வீடன் பிரதமருடன் உச்சிமாநாட்டில் மோடி பேச்சு
எல்.இ.டி விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், 38 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோபன் இடையிலான உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில், இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
அப்போது பிரதமர் மோடி பேசும்போது, பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் மேலும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மின் துறையில் இந்தியாவின் சாதனைகள் குறித்து பேசிய மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க மின் திறன் 162 சதவீதம் அதிகரித்துள்ளது, என்றார்.
எல்.இ.டி விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், 38 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்திருப்பதாகவும், 2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிறுவ இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.