செய்திகள்
மலைப்பாம்பு வெட்டப்பட்ட காட்சி

இறைச்சிக்காக மலைப்பாம்பை வெட்டிய பழங்குடியினர் - வனத்துறையினர் விசாரணை

Published On 2020-02-11 06:48 GMT   |   Update On 2020-02-11 06:48 GMT
திரிபுராவில் அழிந்துவரும் இனமான மலைப்பாம்புகளை இறைச்சிக்காக வெட்டிய பழங்குடியின மக்கள் மீது வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அகர்தலா:

திரிபுரா, மிசோரம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களின் கிராமப்பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். அறிவியலும், நாகரீகமும் வளர்ந்த நிலையிலும் அந்த இனத்தினர் அவர்களது பாரம்பரியத்தையே தற்போதும் பின்பற்றி வருகின்றனர் எனலாம். அவர்களது உணவு, உடை போன்ற சில பழக்கவழக்கங்கள் சற்றே மாறுபட்டிருப்பதை நாம் அறிந்திருப்போம். 

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் இறைச்சிக்காக மலைப்பாம்புகளை துண்டு துண்டாக வெட்டிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 



இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்  ‘திரிபுரா-மிசோரம் எல்லையில் உள்ள வடக்கு திரிபுரா மாவட்டத்தின் சிம்லங் சந்தையில் அழிந்து வரும் இனமான மலைப்பாம்புகள் தோலுரிக்கப்பட்டு, விற்பனைக்காக வெட்டப்பட்டுள்ளன. பாம்புகள் மட்டுமின்றி வேறு சில காட்டு விலங்குகளும் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ எனதெரிவித்தனர்.  
Tags:    

Similar News