செய்திகள்
மணல் கடத்தல்

பழனி வரட்டாற்றில் மணல் அள்ளும் கும்பல்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

Published On 2019-10-13 10:55 GMT   |   Update On 2019-10-13 10:55 GMT
பழனி வரட்டாற்றில் இரவு வேளைகளில் மர்ம நபர்கள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி செல்கின்றனர். இதை தடுக்க வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பழனி:

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இருப்பது வரதமாநதி மற்றும் பாலாறு-பொருந்தலாறு அணைகளாகும்.

அதேபோல் மலைப்பகுதியில் உள்ள சிறு ஓடைகள், சிறிய நதிகள் இணைந்து சண்முகநதியாக உருவெடுக்கிறது. இந்த நதி பழனி, மானூர், கீரனூர் வழியே சென்று அங்குள்ள பகுதிகளை பசுமையாக்குகிறது. இந்நிலையில் மேற்கண்ட அணைகளுக்கு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் நீர்வரத்து இருக்கும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல் ஓடைகள், சிறிய ஆறுகளிலும் நீர்வரத்து உள்ளது. இந்த சண்முகநதியின் கிளைநதியாக வரட்டாறு உள்ளது.

இந்த ஆறானது வரதமாநதி அணையில் இருந்து தொடங்கி சண்முகநதி வரை சென்று ஆற்றில் கலக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்த வரட்டாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவது என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இதன் விளைவு வரட்டாற்றின் கரை முற்றிலும் சேதம் அடைந்து, விரைவில் உடையும் அபாயம் நிலவுகிறது. எனவே வரட்டாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பழனி வரட்டாறு பகுதியில் தொடர்ந்து மணல் அள்ளி வந்ததால் ஆற்றின் கரையோரம் பெரும் சேதமாகி உடையும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து மணல் அள்ளுபவர்களிடம் கேட்டால் அவர்கள் தங்களை மிரட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கும்பல், குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் காலையில் 6 மணிக்கு முன்னதாகவே அள்ளிவிட்டு செல்கின்றனர். இதனால் ஆற்றின் வளம் பறிபோவதுடன் அரசுக்கும் வருவாய் இழப்பு உருவாகிறது. ஆகவே மணல் அள்ளும் மர்ம கும்பல்கள் மீது பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News