செய்திகள்
வால்பாறையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க கோரிக்கை
வால்பாறையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை:
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்களுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி, உடல் வலி ஏற்பட்டு வருகிறது. இவர்கள் வால்பாறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை ஆகியவற்றுக்கு சென்று சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
தற்போது வால்பாறைக்கு கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து உறவினர்களும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து இயற்கை அழகை ரசித்துவிட்டு செல்வதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் பலர் கொரோனா பரிசோதனை செய்ய நினைத்தாலும், இங்கு பரிசோதனை மையம் இல்லை. பொள்ளாச்சிக்கு சென்றுதான் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே வால்பாறை அரசு ஆஸ்பத்திரியிலேயோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திலேயோ கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.