செய்திகள்
ஹர்திக் பாண்ட்யா

இதை செய்ய முடியவில்லை என்றால், இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தகுதியற்றவர்- முன்னாள் தேர்வு குழு உறுப்பினர்

Published On 2021-05-15 04:46 GMT   |   Update On 2021-05-15 04:46 GMT
பந்துவீச முடியவில்லை என்றால் இந்திய அணியில் இடம் பெற ஹர்திக் பாண்ட்யா தகுதியற்றவர் என முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரன்தீப்சிங் கூறினார்.
புதுடெல்லி: 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரன்தீப்சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்காதது ஏன்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. முதுகுவலி காயத்துக்கு ஆபரேஷன் செய்த பிறகு அவரால் வழக்கம் போல் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. இந்திய அணிக்காக ஆடும் லெவனில் அவர் இடம் பெறும் போது ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்களும், 20 ஓவர் போட்டியில் 4 ஓவர்களும் பந்து வீசியாக வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் அவர் விளையாட முடியாது. அவர் பவுலிங் செய்யவில்லை என்றால் அணியின் சரிசம கலவையை பெரிய அளவில் பாதித்து விடும். இதனால் கூடுதலாக ஒரு பவுலரை சேர்க்க வேண்டி உள்ளது. சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு பேட்ஸ்மேனை வெளியே உட்கார வைக்க வேண்டி இருக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இதை பார்த்தோம்.

அணியில் இப்போது வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல் போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருக்கிறார்கள். காயத்தில் இருந்து மீண்ட ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியிருக்கிறார். ஷர்துல் தாகூர் கூட ஆல்-ரவுண்டராக ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். ஒரு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா பந்து வீசவில்லை என்றால் அந்த பணியை இவர்களால் செய்ய முடியும்.

பிரித்வி ஷா திறமையான பேட்ஸ்மேன். ஷேவாக் இந்திய அணிக்காக எப்படி ஆடினாரோ அதே போன்று இவரால் ஆட முடியும். இளம் வீரரான அவரை இப்போதே ஓரங்கட்டக்கூடாது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு பிறகு நீக்கப்பட்டதில் இருந்து முதல்தர கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். அத்துடன் தனது பேட்டிங்கில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளையும் சரி செய்துள்ளார். எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News