ஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள் சபாநாயகர்
நகரி:
ஆந்திராவில் கடந்த தெலுங்குதேச ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர் கோடலா சிவபிரசாத்.
ஒருங்கிணைந்த ஆந்திரா பிரிக்கப்பட்ட போது ஐதராபாத்தில் ஆந்திர சட்டசபை கட்டிடத்தில் இருந்த பொருட்களை அமராவதி சட்டசபை கட்டிடத்துக்கு மாற்றும் போது ஏராளமான பர்னிச்சர் பொருட்கள் மாயமானதாக புகார் எழுந்தது.
புதிதாக ஆட்சி பொறுப் பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் டி.எஸ்.பி. பிரபாகர் ராவ் விசாரணை நடத்தினார்.
இதில் சட்டசபையில் இருந்து 4 வாகனங்களில் ஏற்றப்பட்ட பர்னிச்சர் பொருட்கள் அப்போதைய சபாநாயகர் கோடலா சிவபிரசாத் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சட்டசபையில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சட்டசபையில் இருந்து பர்னிச்சர் பொருட்களை கோடலா சிவபிரசாத்தின் வீடு மற்றும் அவரது மகனின் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து, அவற்றை உபயோகப்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோடலா சிவபிரசாத் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோடலா சிவபிரதாக் தனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘நான் அந்த பொருட்களை திருடவில்லை. தற்காலிக வளாகத்தில் வைத்தால் அவை சேதம் அடையும் என்ற எண்ணத்தில் எனது அலுவலகத்தில் அமைந்துள்ள வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
ஆட்சி மாற்றத்துக்கு பின் அதிகாரிகளை வந்து எடுத்து செல்லுமாறு கூறியும் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் பொருட்களை எடுத்து செல்லலாம். அல்லது அதற்கான பணத்தை தரக்கூட தயாராக இருக்கிறேன்’ என்றார்.