செய்திகள்
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் (கோப்பு படம்)

விமானத்தில் கொரோனா அறிகுறியுடன் பயணி உயிரிழப்பு -சக பயணிகள் கொந்தளிப்பு

Published On 2020-12-20 08:30 GMT   |   Update On 2020-12-20 08:32 GMT
அமெரிக்காவில் நடுவானில் பறந்தபோது விமானத்தில் கொரோனா அறிகுறியுடன் பயணி ஒருவர் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லாஸ்ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு பயணிகள் விமான ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவருக்கு திடீரென உடல் நிலை மோசமானது.

உடனடியாக விமானம் நியூஆர்லியன்சில் தரை இறக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அப்போது இறந்தவருடன் வந்திருந்த அவரது மனைவி, ‘கடந்த ஒரு வாரமாகவே கணவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது’ என்று சக பயணிகளிடம் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் கொந்தளித்தனர். கொரோனா தொற்று அறிகுறி உள்ள ஒருவரை பயணம் செய்ய எப்படி விமான நிறுவனம் அனுமதித்தது என்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விமான நிறுவனம் கூறும்போது, ‘இறந்த நபர் பயணத்துக்கு முன்பு விமான நிலையத்தில் நிரப்பிய படிவத்தில் தனக்கு கொரோனா இருப்பதாகவோ, அறிகுறிகள் உள்ளதாகவோ தெரிவிக்கவில்லை என்று தெரிவித்து உள்ளது.

ஆனால் பயணம் செய்யும் முன்பு பயணியின் உடல்வெப்ப நிலையை ஊழியர்கள் சரியாக பரிசோதிக்கவில்லை என்று மற்ற பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் பயணம் செய்த 179 பயணிகளை தொடர்புகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News