செய்திகள்
கைது

ஆதனக்கோட்டை அருகே கருக்கலைப்பு செய்த பெண் திடீர் மரணம்- கணவர் உள்பட 3 பேர் கைது

Published On 2020-10-14 09:52 GMT   |   Update On 2020-10-14 09:52 GMT
ஆதனக்கோட்டை அருகே கருக்கலைப்பு செய்த பெண் திடீரென இறந்ததை தொடர்ந்து கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆதனக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள சோத்துப்பாளை கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் விஜய் (வயது 22). மரம் வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு திருமயம் அருகே கல்லுக்குடியிருப்பு பகுதியில் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டபோது, அதே பகுதியை சேர்ந்த அடைக்கண் மகள் ரேவதி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் காதலாக மாறியது. இதனிடையே இருவரும் நெருங்கிப் பழகியதால் சில மாதங்களில் ரேவதி கர்ப்பம் ஆனார். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். பின்னர் இருவீட்டாரும் கலந்து பேசி கடந்த ஜூன் மாதம் விஜய்க்கும், ரேவதிக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ரேவதியின் வயிற்றில் வளர்ந்த கரு போதிய வளர்ச்சி இல்லை என கூறி விஜயின் குடும்பத்தார் ரேவதியின் சம்மதம் இல்லாமலும், அவரது பெற்றோருக்கு தெரிவிக்காமலும் முறைகேடாக கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரேவதிக்கு அடிக்கடி உடல் உபாதை ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் உடல்நிலை மோசமடையவே புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அறிந்த ரேவதியின் தாய் ராக்கி (60) அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்து, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சம்மதம் இன்றி கருவை கலைத்ததாக விஜய், அவரது தந்தை முத்தையா (55), தாய் லெட்சுமி (48) ஆகிய 3 பேரை கந்தர்வகோட்டைபோலீசார் கைது செய்தனர். மேலும் ரேவதியின் மரணம் குறித்து உதவி கலெக்டர் விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News