செய்திகள்
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் 166 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே இன்று முதல் மந்திரியாக பதவியேற்றார்.
சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் சமாதி இருக்கும் மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் அமைச்சரவையில் மந்திரி பொறுப்பெற்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிய முதல்மந்திரியாக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி‘‘மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்மந்திரியாக பொறுப்பேற்றுள்ள உத்தவ் தாக்கரே அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மகாராஷ்டிராவில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நீங்கள் விடா முயற்சியுடன் செயல்படுவீர்கள் என எனக்கு நம்பிக்கை உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.