செய்திகள்
பசவராஜ் பொம்மை

பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக தேர்வானது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

Published On 2021-07-30 02:07 GMT   |   Update On 2021-07-30 02:07 GMT
முதல்-மந்திரி பதவி ரேசில் முதலில் பசவராஜ் பொம்மை பெயரே இல்லையாம். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றி பார்ப்போம்...
பெங்களூரு :

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக கட்சி மேலிட உத்தரவின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை தேர்வாகி உள்ளார். ஆனால் முதல்-மந்திரி பதவி ரேசில் முதலில் பசவராஜ் பொம்மை பெயரே இல்லையாம். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றி பார்ப்போம்...

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியும், கர்நாடகத்தை சேர்ந்தவருமான பிரகலாத் ஜோஷி பெயர் முதலில் புதிய முதல்-மந்திரி பதவிக்கு பலமாக அடிபட்டது. பிரதமர் மோடிக்கு இவர் தான் பிடித்தமானவராக இருந்துள்ளார். இதனால் மோடியும் பிரகலாத் ஜோஷியை முதல்-மந்திரியாக நியமிக்க விரும்பியுள்ளார்.

ஆனால் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் நீக்கக் கூடாது என அவர் சார்ந்த வீரசைவ-லிங்காயத் சமுதாய மட்டுமல்லாமல் அனைத்து சமூக மடாதிபதிகள் போர்க்கொடி தூக்கினர். எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து இறக்குவதால் தங்களது வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதை நன்றாகவே உணர்ந்த பா.ஜனதா மேலிடம் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. பெயரை முதல்-மந்திரி பதவிக்கு பரிசீலித்தது. இதனால் அவரும் கடந்த வாரம் டெல்லி சென்று டேரா போட்டிருந்தார். ஏறக்குறையாக அரவிந்த் பெல்லத்தை கர்நாடக முதல்-மந்திரியாக நியமிக்க பா.ஜனதா மேலிட தலைவர்களும் முடிவு செய்திருந்தனர்.

இதைதொடர்ந்து அரவிந்த் பெல்லத் பெங்களூருவுக்கு திரும்பினார். இதற்கிடையே கடந்த 26-ந்தேதி எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மேலிட தலைவர்கள் அரவிந்த் பெல்லத்தை கர்நாடக சட்டசபை பா.ஜனதா தலைவராக (முதல்-மந்திரி பதவிக்கு) தேர்வு செய்யும்படி மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டியிடம் கூறியுள்ளனர்.

ஆனால் கர்நாடக மேலிட பொறுப்பாளரான அருண் சிங், வீரசைவ-லிங்காயத் மடாதிபதிகள் ஆதரவு எடியூரப்பாவுக்கு இருப்பதாகவும், எனவே எடியூரப்பாவை உதாசினப்படுத்தினால் நமது கட்சிக்கு பலவீனம் ஏற்படும் என்று மேலிட தலைவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
எடியூரப்பா
வுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தால், கர்நாடகத்தில் லிங்காயத் சமுதாய வாக்கு வங்கி பா.ஜனதாவுக்கு கிடைக்காமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.



இதை ஆமோதித்த உள்துறை மந்திரி அமித்ஷா தற்போதைய சூழ்நிலையில் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்குவதால், அதிருப்தி எழும். இதை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேட முயலும். எனவே எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்குவதால் ஏற்படும் அதிருப்தியை சமாளிக்க புதிய யுக்தியை அமித்ஷா கையாண்டார்.

அதாவது கர்நாடகத்தின் அடுத்த முதல்-மந்திரியை
எடியூரப்பா
வையே தேர்வு செய்ய வைத்தால், அந்த அதிருப்தி சரியாகிவிடும். அதே வேளையில் எடியூரப்பாவை கவுரவப்படுத்தும் விதமாக இந்த முடிவு இருக்கும். மேலும் லிங்காயத் வாக்கு வங்கியை தக்கவைத்துகொள்ள முடியும் எனவும் அமித்ஷா கணக்குபோட்டார். இதை பிரதமர் மோடியிடம் கூறிய அமித்ஷா எடியூரப்பாவை புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்ய ஒப்புதல் வாங்கினார்.

இதுகுறித்து மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி ஆகியோர் கடந்த 27-ந்தேதி பெங்களூரு காவேரி இல்லத்தில் எடியூரப்பாவை சந்தித்து கூறினர். அதன்படி
எடியூரப்பா
முதல்-மந்திரி தேர்வு விஷயத்தில் தீவிர ஆலோசனையில் இறங்கினார்.

தன்னை குறை கூறி வந்த அரவிந்த் பெல்லத்தை புறந்தள்ளிய எடியூரப்பா தனது நெருங்கிய ஆதரவாளரான பசவராஜ் பொம்மை பெயரை முன்மொழிந்துள்ளார்.

அதன்படி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை கர்நாடக சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளர் என்பதால், அவரது நிழலாக பசவராஜ் பொம்மை செயல்படுவார் என எடியூரப்பா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மேலிட தலைவர்களிடம் கூறியுள்ளனர்.

இதைதொடர்ந்து மேலிட தலைவர்கள், பசவராஜ் பொம்மையிடம் எடியூரப்பா மூத்த தலைவர். அவர் அரசியலில் சிறப்பான அனுபவம் கொண்டவர். அவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் அவரின் நிழலாக செயல்பட வேண்டாம். உங்களது திறமையால் தனித்துவத்துடன் செயல்பட்டு வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Tags:    

Similar News