செய்திகள்
விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை குழு -மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாணை நடத்தியது.
அப்போது, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என தலைமை நீதிபதி பாப்டே எச்சரித்தார்.
வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டபிறகு இன்று முதல் கட்ட உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்காக, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த வழக்கில் மறு பகுதி உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.