செய்திகள்
தீ விபத்தில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் -முதலமைச்சர் அறிவிப்பு
மதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மதுரை:
மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். கல்யாணகுமார், சின்ன கருப்பு ஆகிய வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்த விபத்தில் உயிரிழந்த வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய், அதாவது முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம், அரசு நிதியில் இருந்து 15 லட்சம் வழங்கப்படும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
மேலும் காயமடைந்த வீரர்கள் கல்யாணகுமார், சின்ன கருப்பு ஆகியோருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். அவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.