செய்திகள்
விபத்து

மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் அரசு பஸ்-டெம்போ மோதி 10 பேர் படுகாயம்

Published On 2020-01-09 11:15 GMT   |   Update On 2020-01-09 11:15 GMT
மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் அரசு பஸ்-டெம்போ வேன் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம்:

ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு அரசு பஸ் ஒன்று மாலை 4. 20 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை கோபியை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணகுமார் (47) என்பவர் ஓட்டி வந்தார். ஈரோட்டை சேர்ந்த சங்கரன் (50) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். 

ஈரோட்டில் இருந்து புறப்பட்ட பஸ் மாலை 6.40மணிக்கு மேட்டுப் பாளையம் அன்னூர் ரோட்டில் பொகளூர் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே காய்கறி ஏற்றி வந்த டெம்போ வேன் ஒன்று நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பக்க பக்கவாட்டில் மோதிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று விட்டது. இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி (45) என்பவரின் வலது கை துண்டானது. மேலும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சாய்ராம் (20), கண்டக்டர் சங்கரன் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த பெரியசாமி முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் சிறுமுகை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட டெம்போ வேன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News