செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 29,900 கன அடியாக குறைப்பு

Published On 2019-09-13 03:55 GMT   |   Update On 2019-09-13 03:55 GMT
மேட்டூர் அணையில் இருந்து நேற்று 50 ஆயிரத்து 900 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 29 ஆயிரத்து 900 கன அடியாக குறைக்கப்பட்டது.
சேலம்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.

இதனால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது கிருஷ்ணராஜசகர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் 2 அணைகளில் இருந்தும் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தமிழக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று மாலை தண்ணீர் வரத்து 31 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி உள்பட பல அருவிகள் தற்போது வெளியே தெரிய தொடங்கி உள்ளது. ஆனாலும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 59 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 30 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து நேற்று 50 ஆயிரத்து 900 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 29 ஆயிரத்து 900 கன அடியாக குறைக்கப்பட்டது. இதில் 29 ஆயிரம் கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றிலும், 900 கன அடி தண்ணீர் கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று 120.70 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 120.49 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் குறைந்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News