செய்திகள்
கைது

வெடிகுண்டுவீசி கொன்று விடுவதாக மதுக்கடை கேஷியருக்கு மிரட்டல்- 3 பேர் கைது

Published On 2020-01-09 12:12 GMT   |   Update On 2020-01-09 12:12 GMT
மாதா மாதம் ரூ.25 ஆயிரம் மாமூல் தராவிட்டால் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மதுக்கடை கேஷியரை மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்:

வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த பொன்னுரங்கம் (வயது44). இவர் வில்லியனூர் வள்ளுவன்பேட் பகுதியில் உள்ள மதுக்கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த ராஜசேகர் (29), குயவர்பாளையத்தை சேர்ந்த சிலம்பு என்ற மணிகண்டன் (23) மற்றும் மைக்கேல் (23), ஆகியோர் அடிக்கடி பணம் கொடுக்காமல் மிரட்டி மதுவாங்கி குடித்து வந்தனர்.

அதுபோல நேற்றும் காசு கொடுக்காமல் மதுபாட்டில் கேட்டனர். ஆனால் பொன்னுரங்கம் மதுபாட்டில் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பொன்னுரங்கத்தின் கழுத்தில் வைத்து இப்போது மதுபாட்டில் தருவாயா, இல்லையா என்று மிரட்டினார்.

இதனால் பயந்து போன பொன்னுரங்கம் மதுபாட்டிலை கொடுத்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அவர்கள் மாத மாதம் தங்களுக்கு ரூ.25 ஆயிரம் மாமூல்தர வேண்டும், அப்படி தராவிட்டால் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.

இதுகுறித்து பொன்னுரங்கம் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News