உள்ளூர் செய்திகள்
காரைக்குடி-அறந்தாங்கி சாலையில் மறியல் செய்த ஊர்மக்கள்

கோவில் திருவிழாவுக்கு சென்ற இளம்பெண் கற்பழித்து கொலை: உறவினர்கள்-கிராம மக்கள் மறியல்

Published On 2022-04-17 08:55 GMT   |   Update On 2022-04-17 08:55 GMT
காரைக்குடி அருகே கோவில் திருவிழாவுக்கு சென்ற இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் பக்கமுள்ள சுதந்திரபுரத்தை சேர்ந்தவர் புவனேசுவரி. இவரது கணவர் உதய சூரியனன் இறந்து விட்டார். இதனால் புவனேசுவரி மனநிலை சரியில்லாத தனது மகள் சுகன்யா (வயது 28)வுடன் வசித்து வருகிறார்.

சுதந்திரபுரம் அருகே உள்ள புளியங்குடியிருப்பு வெடத்தையனார் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு நடந்த அன்னதானத்தில் சாப்பிட சென்று வருவதாக கூறி சுகன்யா நேற்று மதியம் வீட்டில் இருந்து சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இரவு ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரை உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். இந்நிலையில் சுதந்திரபுரம் முந்திரி காட்டிற்குள் இளம்பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சாக்கோட்டை போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தனர்.

அப்போது இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? என்று விசாரித்தபோது காணாமல் போன சுகன்யா தான் என்பது தெரியவந்தது. அவர் அங்கு வந்தார்? அவரை யார் கொலை செய்தது? என்பது தெரியவில்லை.

அவரது ஆடை கிழிக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்தார். இதனால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த கோணத்திலேயே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுகன்யா கொலை செய்யப்பட்ட தகவல் சுதந்திரபுரம் பகுதியில் பரவியது. அதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புதுவயல்- அறந்தாங்கி சாலையில் மறியல் செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். ஆனால் வெகுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பெண் கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Tags:    

Similar News