செய்திகள்
ஆந்திராவில் சாராயத்துடன் சானிடைசர் கலந்து குடித்த 10 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை அதிக போதைக்காக சாராயத்துடன் கலந்து குடித்து 10 பேர் உயிரிழந்தனர்.
அமராவதி:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குறிச்சேடு பகுதியில் கொரோனா தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டதால், கடந்த 10 நாட்களாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதுக்கடைகள் மூடப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் 20 பேர் போதைக்காக சானிடைசரை குடித்ததாக கூறப்படுகிறது. தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை சாராயத்துடன் கலந்து குடித்து உள்ளனர். இந்த சம்பவம் கடந்த 4 நாட்களுக்கு முன் நடந்து உள்ளது.
சானிடைசர் குடித்ததால் பாதிக்கபட்ட 20 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு புதன் கிழமை ஒருவர் மரணமடைந்தார். நேற்று வியாழக்கிழமை 3 பேர் மரணமடைந்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.