வழிபாடு
அபிஷேகத்திற்காக தேங்காயில் இருந்து பாத்திரங்களில் நெய்யை சேகரிக்கும் பக்தர் குழுவினர்.

சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக ஐயப்பனுக்கு 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகம்

Published On 2022-01-04 05:58 GMT   |   Update On 2022-01-04 05:58 GMT
சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகத்தை நாளை (புதன்கிழமை) நடத்த முன் பதிவு செய்து உள்ளார்.
சபரிமலை ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்வது பக்தர்களின் மிக முக்கியமான வழிபாடு ஆகும். இதற்காக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நெய் நிறைக்கப்பட்ட ஒன்று அல்லது 2 தேங்காய்களை இரு முடிகட்டுடன் சுமந்து வருவார்கள். சன்னிதானத்தில் அந்த தேங்காயை உடைத்து அதில் உள்ள நெய்யை சேகரித்து, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர், தான் நினைத்த காரியம் ஐயப்பன் அருளால் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து 18 படிகள், 18 மலைகளை தியானித்து, நேர்ச்சையாக 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகம் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி 18 ஆயிரம் தேங்காய் மற்றும் அதற்கு தேவையான நெய் ஆகியவற்றை அவர் லாரி மூலம் பம்பைக்கு அனுப்பிவைத்தார். மேலும், நெய்யபிஷேகத்திற்கான கட்டணமாக ரூ.18 லட்சத்திற்கான வரைவோலையையும் தேவஸ்தான செயல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பம்பை வந்து சேர்ந்த 18 ஆயிரம் தேங்காய் மற்றும் நெய்யினை தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பெற்றுக்கொண்டார். பின்னர் தேவஸ்தான ஊழியர்களின் உதவியுடன் தேங்காயில் நெய்யை நிரப்பும் பணி நடைபெற்றது. இதை தொடர்ந்து நெய் நிரப்பப்பட்ட தேங்காய் டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டுவரப்பட்டு உள்ளது. நாளை (புதன் கிழமை) காலை அந்த குறிப்பிட்ட பக்தரின் சார்பில் 18 ஆயிரம் நெய் தேங்காய்களை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

சபரிமலை வரலாற்றில் ஒரே பக்தர் 18 ஆயிரம் நெய் தேங்காயை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வது இதுவே முதல் முறை என்று திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர் தெரிவித்தார்.
Tags:    

Similar News