செய்திகள்
அரசு பேருந்துகள்

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

Published On 2021-10-21 04:27 GMT   |   Update On 2021-10-21 05:06 GMT
விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், வந்தவாசி, ஆரணி, புதுச்சேரி, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை:

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி தொடங்கி உள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் அதிகமாக நடப்பது வழக்கம்.

ஐப்பசியின் முதல் முகூர்த்த நாள் வருகிற 24, 25, தேதிகளில் வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியூர் பயணங்களை அதிகம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க விழுப்புரம் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.



வருகிற 23, 24, 25 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், வந்தவாசி, ஆரணி, புதுச்சேரி, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

புரட்டாசி மாதத்தில் விசே‌ஷங்கள் கடைபிடிப்பதில்லை. ஐப்பசி மாதத்தில் பண்டிகை நாட்களோடு முகூர்த்த நாட்களும் வருகின்றன. அதனை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

ஐப்பசி முதல் முகூர்த்த நாள் வருவதால் பொதுமக்கள் அதிகளவு பயணம் செய்யக்கூடும் என கருதி சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. பொதுமக்கள் தேவைக்கேற்ப பஸ்களை விட தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News