உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பொம்மிடி ஆட்டு சந்தையில் ரூ.1.5 லட்சம் கள்ளநோட்டு சிக்கியது

Published On 2022-01-13 11:10 GMT   |   Update On 2022-01-13 11:10 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த ஆட்டுச் சந்தையில் கள்ளநோட்டு புழக்கம் சம்பவம் வியாபாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த துறிஞ்சி பட்டி, வடசந்தையூர் கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மாடு,ஆடு கோழிகளை கொண்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை நடைபெற்ற சந்தையில் ஆட்டு வியாபாரிகள் 2 பேர் ஆடுகளை வியாபாரம் பேசி பணம் ஒரு லட்சத்து 5 ரூபாய் கொடுத்துள்ளனர், அப்போது பணத்தை வாங்கியவர் எண்ணிப் பார்க்கும்போது அவை அனைத்தும் கள்ள நோட்டுகளும் கலர் பேப்பர்களும் என்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆடு விற்பவர் கள்ளநோட்டு குறித்து அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். இதனால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் பொம்மிடி போலீஸ் நிலையத்திற்கும் சென்றது. இதையறிந்த சப் இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி, சந்தை பகுதிக்கு வந்து கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த வியாபாரிகளை பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த மாணிக்கம் (வயது 58 ), மற்றும் அவரது மகன் சிவ சங்கரநாதன் (35) என்பதும், இவர்கள் இருவரும் திருச்செந்தூரில் இருந்து சரக்கு வாகனத்தில் வந்து ஆடுகள் வியாபாரத்திற்காக கள்ள நோட்டுகளை பயன்படுத்தி ஆடுகளை வாங்கிச் செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது

அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

பிடிபட்ட தந்தை-மகன் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கும் கள்ள நோட்டு புழக்கத்தில் விடும் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News