செய்திகள்
கோப்பு படம்.

சேலம் அருகே மாணவியை கடத்திய வாலிபர் சிறையில் அடைப்பு

Published On 2021-02-20 09:48 GMT   |   Update On 2021-02-20 09:48 GMT
சேலம் அருகே பேஸ்புக் மூலம் பழகி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சங்ககிரி:

சேலம் மாவட்டம், வைகுந்தம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இவர், கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுபற்றி பெற்றோர், சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாணவி பயன்படுத்தி வந்த போனில், ஒரு வாலிபர் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், புதுக்கோட்டையை சேர்ந்த சரத்குமார் (26) என்ற வாலிபர், மாணவியிடம் பேஸ்புக் மூலம் பழகி, திருப்பூருக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. மாணவியை மீட்டு, வாலிபரை பிடிக்க தனிப்படை போலீசார் திருப்பூர் விரைந்தனர்.

அதற்குள் போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர் மாணவியை சங்ககிரிக்கு அழைத்து வந்து பழைய பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பிக்க முயன்றார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர், மாணவியுடன் பேஸ்புக்கில் சாட்டிங் செய்து, நெருங்கி பழகியதாகவும், பின்னர் தான் வேலை பார்க்கும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு அழைத்துச் சென்று, அங்கு 3 நாட்கள் தனியாக தங்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கடத்திய சரத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட மாணவியை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News