ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த மாரியம்மனை மனமுருக வணங்கினால் நினைத்தது நடக்கும், செல்வம் செழிக்கும்,குடும்பத்தில் அமைதி தவழும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். செவ்வாய், வெள்ளி, புதன்,ஞாயிறு போன்ற நாட்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களிலும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள்.
ஆங்கில புத்தாண்டை யொட்டி சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை 5.30 மணியிலிருந்தே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் வந்தனர். பலர், குழந்தைகளை கரும்புத்தொட்டிலில் சுமந்தும், மொட்டை அடித்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் ராஜகோபுரத்தின் முன்பும், தீபம் ஏற்றும் இடத்திலும் பெண்கள் தீபம் ஏற்றி அம்மனை வணங்கினர். பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.
வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் வந்ததால், கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர். மேலும் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டனர்.