செய்திகள்
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் 2 நாட்கள் மட்டும் 15 மசோதாக்கள் நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் 2 நாட்களில் மாநிலங்களவையில் 15 மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கடந்த 14-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.
ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கூட்டத்தொடர் 10 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இதனால், பாராளுமன்ற இரு அவைகளும் கடந்த 23-ம் தேதி நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டு அவைகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டன.
இதற்கிடையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதா கடந்த 22-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அவையில் கடுமையான அமளி நிலவியது.
இந்த விவகாரம் தொடர்பாக 10 உறுப்பினர்களை மாநிலங்களவை துணை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், கூட்டத்தொடரின் இறுதி நாளிலும் எதிர்க்கட்சிகள் சபை நடவடிக்கையில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அவை நடவடிக்கைகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில் மொத்தம் 10 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தலா 25 மசோதாக்கள் நிறைவேறியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் வேளாண் மசோதாக்கள், தொற்று நோய் சட்டத்திருத்த மசோதாக்களும் உள்ளடக்கம்.
குறிப்பாக, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த செபடம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் 15 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.