தொழில்நுட்பம்
ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் இலவச அழைப்புகள் அறிவிப்பு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நீட்டித்து இருப்பதோடு இலவச அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் பயனர்களுக்கு வேலிடிட்டியை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் 17 வரை வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு இருப்பதோடு, 100 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
முன்னதாக ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புடன் இலவச டேட்டா நொடிக்கு 10 எம்.பி. வேகத்தில் வழங்குவதாக அறிவித்தது. இத்துடன் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்குகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியில் சென்று ரீசார்ஜ் செய்ய முடியாத காரணத்தால் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர ஏடிஎம், யுபிஐ, கால், எஸ்எம்எஸ் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. ஆன்லைனில் கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே யுபிஐ, மொபிகுவிக், ஃபிரீசார்ஜ் உள்ளிட்ட சேவைகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
மேலும் எஸ்எம்எஸ் மூலம் ரீசார்ஜ் செய்ய ரிலையன்ஸ் ஜியோ ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுடன் இணைந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.