ஆன்மிகம்
சொர்ண ஆகர்ஷண பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

திண்டுக்கல் தாடிக்கொம்புவில் பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2021-03-08 03:25 GMT   |   Update On 2021-03-08 03:25 GMT
திண்டுக்கல், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளின் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளின் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின் போது சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தேய்பிறை அஷ்டமியான நேற்று, சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பால், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சன பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில், சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று நடந்த சிறப்பு பூஜையில் திண்டுக்கல் மட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள கால பைரவர் சன்னதியில், தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று மாலை 5.30 மணியளவில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது. இதையொட்டி சுவாமி காலபைரவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

பட்டிவீரன்பட்டி ஸ்ரீபகவதியம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீ கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. மேலும் ஸ்ரீகாலபைரவருக்கு பால், தேன் கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீ கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கும் பூஜைகள் நடந்தன.
Tags:    

Similar News