செய்திகள்
கூத்தாநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது
கூத்தாநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து விற்பனை செய்வதாக கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொதக்குடி பஜார் பகுதிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதிகளில் அத்திக்கடை அண்ணா நகரை சேர்ந்த கங்காதரன் (வயது 40) , பொதக்குடி மேலத்தெருவை சேர்ந்த ஒளிமுகமது (56), பொதக்குடி கமாலியா தெருவை சேர்ந்த அப்துல் வகாப் (72) ஆகியோர் ஆன்லைன் லாட்டரி விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.