செய்திகள்
செல்போன் பறிப்பு

மதுரையில் கத்தியால் தாக்கி செல்போன்கள் பறிப்பு

Published On 2019-09-09 09:35 GMT   |   Update On 2019-09-09 09:35 GMT
மதுரையில் கத்தியால் தாக்கி 2 பேரின் செல்போன்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

மதுரை:

திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (வயது 28). இவர் மதுரை முத்து மேம்பாலம் பகுதியில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மணிகண்டனை மிரட்டினர்.

மேலும் அவரை கத்தியால் வெட்டிவிட்டு, செல்போனை பறித்துச் சென்றதாக ஜெய்ஹிந்து புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிந்தாமணி பர்மா காலனியைச் சேர்ந்த முருகவேல் (40) கீரைத்துறை பகுதியில் நடந்து சென்றார். அப்போது சிலர் வழிமறித்து வாளால் வெட்டியதோடு செல்போனையும் பறித்துச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சர்வேயர் காலனி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி கார்த்தீஸ்வரி (44) முனிச்சாலையில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து  நகையை பறித்துச் சென்றனர்.

இது குறித்து விளக்குத் தூண் போலீசில், கார்த்தீஸ்வரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடக்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி ஆனந்தலட்சுமி (41) வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

அப்போது யாரோ வீடு புகுந்து 5 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News