செய்திகள்
கொரோனா நிலவரம்...4 மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர்
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 முதலமைச்சர்களை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு கொரோனா நிலவரம் தொடர்பாக பேசி உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையானது 4 லட்சத்தை கடந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. கொரோனா நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து ஆய்வு செய்து, உரிய அறிவுறுத்தல்களை வழங்கிவருகிறார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக இன்று 4 மாநிலங்களின் முதலமைச்சர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோரிடம், அந்தந்த மாநிலங்களில் கொரோனா நிலவரம் தொடர்பாக பிரதமர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 முதலமைச்சர்கள், இரண்டு துணைநிலை ஆளுநர்களை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு கொரோனா நிலவரம் தொடர்பாக பேசி உள்ளார்.