செய்திகள்

ஈரோட்டில் ஓடும் பஸ்சில் டாக்டரிடம் லேப்-டாப், செல்போன் திருடிய வாலிபர் கைது

Published On 2018-10-13 10:42 GMT   |   Update On 2018-10-13 10:42 GMT
ஈரோட்டில் ஓடும் பஸ்சில் இருந்து டாக்டரிடம் லேப்-டாப் மற்றும் செல்போன் அடங்கிய பையை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் அடுத்த புது உடையம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது37). இவர் அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

இதற்காக அவர் தினமும் அவினாசிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்த பஸ் சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வழியாக ஈரோடு வந்து அவினாசிக்கு செல்லும்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ராஜ்குமார் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ராஜ்குமார் தனது லேப்-டாப், செல்போன் அடங்கிய பொருட்களை ஒரு பையில் வைத்திருந்தார்.

ராஜ்குமாரின் பின் பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த பையை திடீரென பிடுங்கி கொண்டு ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் திருடன் திருடன் என கத்தினார். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஈரோடு அடுத்த தாமரை பாளையம் புது காலனியைச் சேர்ந்த மயில்ராஜ் (வயது39) என தெரியவந்தது.

மயில்ராஜிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News