செய்திகள்
கைது

களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் 5 பேர் கைது

Published On 2021-04-09 05:08 GMT   |   Update On 2021-04-09 05:08 GMT
களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நேற்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 5 வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றனர். விசாரணைக்காக போலீசார் அவர்களை அழைத்தபோது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் போலீசார் சோதனை நடத்திய போது அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் 5 நாட்டு வெடிகுண்டுகள், 4 அரிவாள்கள் இருந்தது. உடனடியாக போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-

1. முத்துமனோ (வயது 27), வாகைக்குளம், 2.மாதவன் (19), பொத்தையடி, விஜய நாராயணம், 3.சந்திரசேகர் (22), பொத்தை யடி, விஜயநாராயணம், 4.அருள் துரை சிங் என்ற கண்ணன் (23), பெத்தானியா, களக்காடு, மற்றொருவர் 17 வயதுடைய பணகுடியைச் சேர்ந்த சிறுவன் ஆவார்.

இவர்கள் அனைவரையும் போலீசார் பாதுகாப்பாக போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் திடுக் கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

களக்காடு பகுதியை சேர்ந்த ஒரு 10-ம் வகுப்பு மாணவன், அந்த பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்துள்ளார். இது அந்த மாணவியின் உறவினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் அந்த மாணவனை பலமுறை எச்சரித்து உள்ளனர். ஆனாலும் அந்த மாணவர் அடிக்கடி மாணவியை பின் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இதனால் மாணவியின் உறவினர்கள் அந்த மாணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் களக்காடு பெத்தானியா பகுதியை சேர்ந்த அருள்துரை சிங் என்ற கண்ணனை தொடர்பு கொண்டு விபரத்தை கூறி உள்ளனர்.

அவரும் அவரது நண்பர்களான 4 பேரும் அந்த மாணவனை தீர்த்து கட்ட வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்களுடன் சென்ற போதுதான் போலீசில் சிக்கி உள்ளனர்.

கைதான 5 பேரிடமும் நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது என்றும், கொலை செய்ய அனுப்பியது யார்? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News