செய்திகள்
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நாளை இந்தியா வருகை
வங்காளதேச பிரதமர் சேக் ஹசினா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
புதுடெல்லி:
இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நாளை இந்தியா வருகிறார். நாளை முதல் வரும் 6 ஆம் தேதி வரை 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச உள்ளார். அதனைத் தொடர்ந்து வரும் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளிலும் தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஷேக் ஹசினா முதன் முறையாக இந்தியா வரவிருக்கிறார். இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பின் போது சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் மூன்று இருதரப்பு திட்டங்கள் காணொலி மூலம் தொடங்கப்படும் என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் வரும் 3 (நாளை) மற்றும் 4 ஆம் தேதிகளில் உலக பொருளாதார மன்றம் சார்பாக நடைபெறும் இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஷேக் ஹசினா கலந்து கொள்ள இருக்கிறார்.