செய்திகள்
கீழக்கரையில் 4 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
கீழக்கரையில் 4 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சமூக விரோதிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தவறான பழக்கத்திற்கு அடிமையாகி இளைஞர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது. கஞ்சா, போதை பொருட்கள் விற்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் மின்வாரிய அலுவலகம் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் மறித்தனர். ஆனால் ஆட்டோ நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் ஜீப்பில் ஆட்டோவை விரட்டினர்.
கீழக்கரை முனீஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பினார். அங்கு வந்த போலீசார் ஆட்டோவில் சோதனை நடத்தினர். அப்போது அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோவும், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியது ஜெகன்நாதன் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் தலா ஒரு கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. 2 மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்தியவர்கள் கீழக்கரையை சேர்ந்த யூசூப் சுலைமான் (40), நாகராஜ் (22) என தெரியவந்தது. 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஜெகன்நாதன், யூசூப் சுலைமான், நாகராஜ் ஆகிய 3 பேரும் சாகுல் அமீது என்பவருக்கு கஞ்சாவை கடத்தி செல்ல முயன்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.