செய்திகள்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராவண வதம்: பிரதமர் மோடி பங்கேற்பு
தசரா பண்டிகையின் இறுதி நாளான இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த ராவண வதம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி:
தசரா பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் இறுதி நாளில் டெல்லி செங்கோட்டை அருகில் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்தில் ராவண வதம் நடைபெறும். இதையொட்டி அங்கு ராவணனை ராமர் வதம் செய்ததை நினைவூட்டும் வகையில், ராவணனின் உருவ பொம்மைக்கு தீவைத்து எரிப்பது வழக்கம். தீய சக்திகள் அழிந்து நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதை வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான தசரா பண்டிகையின் இதன் நிறைவு விழா இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது.
அங்கு ராமர், லட்சுமணர், அனுமன் உருவங்களில் இருந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திலகமிட்டார். அதன்பின்னர், அங்கு 80 முதல் 90 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ராவணனின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. அதன்பின் ராமர் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவின் போது இந்த தசரா பண்டிகையை நாம் கொண்டாடி வருகிறோம். எனது அன்பான நாட்டு மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
இந்த ஆண்டுக்கான நோக்கமாக இதை மேற்கொண்டு நாம் உழைத்து செய்து முடிக்க வேண்டும். உணவுப்பொருள்களை வீணாக்கக் கூடாது. மின்சக்தி மற்றும் தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும் என்பதை இந்தாண்டுக்கான நோக்கமாக கொள்ள வேண்டும்.
பெண்களை நாம் உயர்வாக மதித்து வருகிறோம். பெண்களை மதிப்பது தொடர்பாக மன் கி பாத் நிகழ்ச்சியில் ஏற்கனவே நான் பேசியுள்ளேன். நம் பெண்கள் லட்சுமி தேவி போன்றவர்கள். பெண்களின் முன்னேற்றத்திற்காக நாம் உழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.