உள்ளூர் செய்திகள்
ஈரோடு ரெயில் நிலையம்

ஈரோட்டில் தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் பயணம்

Published On 2022-01-12 06:44 GMT   |   Update On 2022-01-12 06:44 GMT
ஈரோட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
ஈரோடு:

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. மேலும் வருகிற 17-ந் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பலர் முன் கூட்டியே சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.

ஏற்கனவே சொந்த ஊருக்கு செல்வதற்காக திட்டமிட்டு ரெயிலில் முன்பதிவு செய்த பயணிகளும் தற்போது செல்கின்றனர். இதனால் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இதேப்போல் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்களும் பல்வேறு நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை யொட்டி அரசு அலுவலர்களுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறையும், தொழிலாளர்களுக்கு ஒரு வாரமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொங்கல் பண்டிகை கொண்டாட தங்களது குடும்பத்தினருடன் நேற்று முதல் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். வெளி மாவட்ட மக்களுக்காக சிறப்பு பஸ்களும் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் காரணமாக வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் 75 சதவீத பயணிகளுடன் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இன்று ஈரோடு பஸ் நிலையத்தில் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.

Tags:    

Similar News