செய்திகள்
உடுமலை பகுதி ஊராட்சிகளில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை-பொதுமக்கள் கோரிக்கை
தற்போது வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி எந்த ஒரு விலங்குகளை பிடிக்கவோ கொல்லவோ முடியாது.
உடுமலை:
கடந்த காலங்களில் நகராட்சிகளில் மட்டுமின்றி ஊராட்சி களில் கூட தொல்லை தரும் தெருநாய்கள் மற்றும் வெறி நாய்களை பிடித்துச் செல்லும் நடைமுறை இருந்தது. தெரு நாய்களை பிடித்துச் சென்று அவற்றின் இனவிருத்தியை தடுப்பதற்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
தற்போது வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி எந்த ஒரு விலங்குகளை பிடிக்கவோ கொல்லவோ முடியாது. இதனால் உடுமலை சுற்றுப்பகுதி ஊராட்சிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரோட்டில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே ஊராட்சியில் தெருநாய்களை கணக்கிட்டு அவைகளுக்கு கருத்தடை மற்றும் தடுப்பு ஊசி போட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக விலங்குகள் நல வாரியத்திடம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.