செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி
விழுப்புரம் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியவை மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 206 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 51 ஆயிரத்து 82 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தினர் 216 பேரும் என மொத்தம் 16 லட்சத்து 84 ஆயிரத்து 504 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் வினியோகம் செய்வதற்காக மாவட்ட தேர்தல் அலுவலகமான கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பூத் சிலிப்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.