உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.

பண்ணாரி சோதனை சாவடியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் சிக்கியது

Published On 2022-01-28 04:35 GMT   |   Update On 2022-01-28 04:59 GMT
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை 2 மணி அளவில் வாகன சோதனை செய்தனர்.

அப்போது காய்கறி ஏற்றிக் கொண்டு 2 பிக்கப் வேன் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த பிக்கப் வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அதை ஓட்டி வந்தவர்கள் மைசூரில் இருந்து கோவைக்கு காய்கறி ஏற்றிச் செல்வதாக தெரிவித்தனர்.

அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் காய்கறி லோடை திறந்து பார்த்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 2 டன் அளவுக்கு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த பிரசன்னா (30), சுதாகர் (30) என்று தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் புகையிலை பொருட்களை மைசூரில் இருந்து கோவைக்கு காய்கறி லோடில் மறைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் 2 பிக்கப் வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் கோவைக்கு யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News