செய்திகள்
புதுப்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி
புதுப்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுப்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் ஆனாங்கூரை சேர்ந்தவர் நீலகண்டன் மனைவி சாந்தி(வயது 52). இவர் விழுப்புரம் ரெயில்வே கேட் பகுதிகளில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கொய்யாப்பழம் பறிப்பதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள வரிஞ்சிப்பாக்கத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள தயாநிதி என்பவருடைய தோப்பில் கொய்யாப்பழம் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த தோப்பில் மின்கம்பி ஒன்று அறுந்து கீழே கிடந்துள்ளது. இதை அறியாத சாந்தி, அந்த மின்கம்பியை மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் சாந்தி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தியின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொய்யாத்தோப்பில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.