செய்திகள்
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு கொரோனா தொற்று
தர்மபுரியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி:
பெரும்பாலை அருகே உள்ள அரகாசனஅள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜிக்கு சொந்தமான ஆடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இதுதொடர்பான புகாரின்பேரில் பெரும்பாலை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ஆடுகளை திருடியது தெரியவந்தது.
இதுதொடர்பாக 21 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். கைது செய்யப்பட்ட வாலிபருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர் அரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் போலீசார் சேர்த்தனர். அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்த போலீசார் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.