செய்திகள்
சென்னை ஐகோர்ட்

முழு ஊரடங்கு அமல்படுத்த கோரி வழக்கு- ஐகோர்ட்டில் நாளை விசாரணை

Published On 2021-05-04 06:55 GMT   |   Update On 2021-05-04 06:55 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கை அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், பாலாஜிராம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் தற்போது 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளனர் என்று அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசி மருந்துகளை 90 சதவீத மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகளான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள், மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைக்கு 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

135 கோடி மக்கள் தொகையில் 2 முதல் 5 சதவீதம் மக்களுக்கே இந்த தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் இல்லை.

எனவே தமிழகத்தில் மேலும் 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

செங்கல்பட்டில், 100 ஏக்கர் பரப்பில் மத்திய அரசால் 2012-ல் துவங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி நிறுவனத்துக்கு ஏற்கனவே 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ளது.



58.5 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் திறன் பெற்ற இந்த ஆலையில் உற்பத்தியை தொடங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால், பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News