திருமங்கலத்தில் ஓட்டு போட சொந்த ஊருக்கு வந்த வாலிபர் மர்ம மரணம்
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம்-ராஜபாளையம் பிரிவில் பழைய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளது. பயன்பாடற்ற நிலையில் இருந்த அலுவலகத்திற்கு பின்புறம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டி மீனாட்சி நகரைச் சேர்ந்த சங்கர்ராஜ் (வயது 38) என்பது தெரிய வந்தது.
இவர் கோவையில் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கராஜ் வாக்களிப்பதற்காக கோவையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்கு செல்லவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் தங்கராஜை தேடினார்கள். இந்த நிலையில் தான் அவர் பிணமாக மீட்கப் பட்டுள்ளார்.
பயன்பாடு இல்லாத இந்தப் பகுதிக்கு அவர் எதற்காக வந்தார்? என்று தெரியவில்லை. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வேறு யாரும் அவரை அடித்துக் கொலை செய்து விட்டு பிணத்தை வீசிவிட்டுச் சென்றனரா? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.
சம்பவம் நடந்த பகுதியான நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சமூக விரோதிகள் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாகவும், இதனை போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே இந்தப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.