பெண்கள் மருத்துவம்
கர்ப்பிணிகள் `ஜில்லென்று' கோடைகாலத்தை ஜாலியாக கழிக்க...

கர்ப்பிணிகள் ஜில்லென்று கோடைகாலத்தை ஜாலியாக கழிக்க...

Published On 2022-05-11 07:19 GMT   |   Update On 2022-05-11 07:19 GMT
கோடை என்றாலே `உஷ்.. என்ன வெயில்!' என்று, முகம் சுளிக்கவேண்டாம். கர்ப்பிணிகளின் ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பது போன்ற உணர்வுடன் `ஜில்லென்று' கோடைகாலத்தை ஜாலியாக கழிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
பொதுவாகவே கர்ப்பிணிகளின் உடல்வெப்ப நிலை சற்று அதிகமாக இருக்கும். அதோடு கோடை வெயில் உஷ்ணமும் சேர்ந்துகொள்வதால் அவர்கள் அதிக அவஸ்தைகளை அனுபவிப்பார்கள்.

கர்ப்பிணிகள் முடிந்த அளவு பகல் நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. அடிக்கடி தண்ணீரில் நனைத்த துணியை கழுத்தின் பின்பகுதியிலும், நெற்றியிலும் வைத்தால் இதமாக இருக்கும். ஸ்பிரே பாட்டிலில் தண்ணீரை ஊற்றிவைத்துக்கொண்டு அவ்வப்போது முகத்தில் ஸ்பிரே செய்து துடைப்பது ஆசுவாசம் தரும்.

மூன்று மாத கர்ப்பத்தை கடந்தவர்களுக்கு கோடை காலத்தில் காலில் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். பகல் நேரத்தில் தூங்கும்போது காலுக்கு கீழ் ஒரு டவலை மடக்கிவைக்கவேண்டும். பகலில் அதிக நேரம் தூங்குவதும் நல்லதல்ல. உட்கார்ந்திருக்கும்போது காலை சற்று மேலே தூக்கிவைத்திருப்பது அவசியம்.

ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு கப் என்ற அளவில் தண்ணீரை பருகிக்கொண்டிருக்கவேண்டும். வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை சாறு, ஆரஞ்சு ஜூஸ் போன்றவைகளை குடித்தால் உஷ்ணம் குறைவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

அதிகமாக வியர்க்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைவது மட்டுமின்றி உடலுக்கு இன்றியமையாத எலக்ட்ரோலைட்டுகளும் இழப்பாகிறது. அதனால் தண்ணீர் குடிப்பதோடு மட்டுமின்றி உப்பு சேர்த்த கஞ்சி தண்ணீர் பருகுவது நல்லது. உடலில் எலக்ட்ரோலைட்டு அளவு குறைந்தால் தசைப்பிடிப்பு ஏற்பட்டு கர்ப்பிணிகள் அவதி்ப்படுவார்கள். தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களும் கோடைகாலத்தில் போதுமான அளவில் தண்ணீர் பருகவேண்டும்.
Tags:    

Similar News