செய்திகள்
மத்திய மந்திரி எல்.முருகன்

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.246 கோடி முறைகேடு- மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி

Published On 2021-11-03 19:46 GMT   |   Update On 2021-11-03 19:46 GMT
கடல்சார் மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் மீனவ சங்கங்களின் ஆலோசனை பெறப்பட்டு அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.
சென்னை:

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (100 நாள் வேலை திட்டம்) கீழ் தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 565 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிலுவைத்தொகை ரூ.1,178 கோடியை விடுவிக்க வேண்டும் என்று அக்டோபர் 27-ந் தேதி மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது ஒரு வாரத்தில் நிலுவைத்தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்தார்.

ஆனால் 5 நாட்களிலேயே, தமிழக அரசு கோரியதைவிட அதிகமாக ரூ.1,361 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.

மத்திய அரசை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுமார் ரூ.246 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வெறும் ரூ.1 கோடியே 85 லட்சம் வரை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.



இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 2 ஆயிரத்து 500 லட்சம் மனித வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டபோதிலும், தமிழக அரசு 2 ஆயிரத்து 190 லட்சம் மனித வேலை நாட்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்படி மாவட்டத்துக்கு ஒரு குறைதீர் அதிகாரி, சமூக தணிக்கை குழு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்று எந்த ஒரு அதிகாரியும் நியமிக்கப்படவில்லை.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கோரியபோதிலும், கடந்த மாதம் 25-ந் தேதி வரை தமிழக அரசு இந்த விவரங்களை அளிக்கவில்லை. தமிழக அரசின் அலட்சியப் போக்கால் மீனவர்கள் விடுவிக்கப்படுவது தாமதமாகி வருகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சியில் என்னைச் சந்தித்து முறையிட்டனர். மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம்கூட நடைபெறவில்லை.

கடல்சார் மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் மீனவ சங்கங்களின் ஆலோசனை பெறப்பட்டு அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சென்னை பத்திரிகை தகவல் மையத்தின் இயக்குனர் பி.குருபாபு உடன் இருந்தார்.

Tags:    

Similar News