ரெட்டியார்பாளையத்தில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் ஜெ.ஜெ. நகர் 5-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் குமார்(வயது52). இவர் சின்ன மணிக்கூண்டு ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு ஆண்டாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.
இதற்கிடையே மகள்கள் திருமணத்துக்கு குமார் வட்டிக்கு பணம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் குமார் திண்டாடி வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை குமார் வழக்கம்போல் ஆட்டோ ஓட்ட சென்றார். பின்னர் மதியம் 12 மணியளவில் குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் தனது மனைவி ஆண்டாளிடம் நாளைக்கு வட்டி கட்ட பணம் இல்லை என வேதனையுடன் தெரிவித்தார். அவருக்கு ஆண்டாள் ஆறுதல் கூறி சமையல் செய்ய சென்றார்.
பின்னர் மாடிக்கு சென்ற கணவர் வெகுநேரமாக சாப்பிட கீழே வராததால் சந்தேகம் அடைந்த ஆண்டாள் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது மாடிப்படி கூண்டில் உள்ள சிமெண்டு ஜாலியில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.
பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.