வழிபாடு
பூசாரிகள் மட்டும் தீ மிதித்த காட்சி

தாளவாடி மல்லிகார்ஜுனா சாமி கோவில் குண்டம் விழா: பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர்

Published On 2022-04-04 04:04 GMT   |   Update On 2022-04-04 04:04 GMT
தாளவாடி மல்லிகார்ஜுனா சாமி கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த 30 அடி நீளமுள்ள குண்டத்தில் 7 பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர். பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு தாளவாடி மல்லிகார்ஜுனா சாமி கோவில் குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து மல்லிகார்ஜுனா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் சாமி உற்சவர் சிலை மேளதாளங்கள் முழங்க ஆற்றங்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து உற்சவர் வீதி உலா நடந்தது. ஒசூர் ரோடு, தலமலை ரோடு, சத்திரோடு வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் கோவிலை வீதி உலா வந்தடைந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் பூசாரிகள் 5 பேர் மட்டும் தீ மிதித்தனர்.

அதேபோல் தொட்டகாஜனூர் மண்டேசாமி கோவில் குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு புலி ஆட்டத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் மண்டேசாமி, பீரேஸ்வரசாமி, லட்சுமிதேவி, மாரியம்மன், சவுடேஸ்வரி, மசனம்மாள், ராக்காயி அம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன.

குண்டம் விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் மேளதாளங்கள் முழங்க சாமிகள் வீதி உலா நடந்தது. அதைத்தொடர்ந்து ஆற்றங்கரை சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து மீண்டும் திருவீதி உலாவாக கோவிலுக்கு புறப்பட்டனர். அப்போது பக்தர்கள் சாமிகளுக்கு மாலை அணிவித்து தேங்காய், பழம் உடைத்து வழிட்டனர்.

ஆர்.சி. வீதியில் தூவப்பட்டு இருந்த 400 கிலோ மலர் பாதத்தில் சாமிகளை அழைத்து சென்றனர். காலை 9 மணி அளவில் சாமிகள் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த 30 அடி நீளமுள்ள குண்டத்தில் 7 பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர். பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. பக்தர்கள் குண்டத்தை தொட்டு வழிபட்டனர். விழாவில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூரு, சிக்கொலா, அட்டுகுளிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News