உள்ளூர் செய்திகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
கலெக்டர் அலுவலக முன்புற வளாகம் அருகே அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் கார்கள் நிற்கும் வளாகத்தில் போலீசாரும், அரசு அலுவலர்களும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாய்வுதளத்துக்கு செல்ல முடியாதபடி இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதேபோல் கலெக்டர் அலுவலக வளாக நுழைவாயில் அருகே போராட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தது.
கலெக்டர் அலுவலக முன்புற சுவர், பக்கவாட்டு சுற்றுச்சுவர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் பேரிகார்டுகளில் ‘போஸ்டர்’ ஒட்டுவதும், போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பேனர்கள் வைப்பதும் அதிகரித்தது.
இதுதொடர்பாக புகார்கள் எழவே அனுமதிக்கப்படாத இடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினாலோ, ‘போஸ்டர்’ ஒட்டினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் எச்சரித்துள்ளார். அதன்படி கலெக்டர் அலுவலக முன்புற வளாகம் அருகே அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியிலும் ‘போஸ்டர்’ ஒட்டக்கூடாது, மீறினால் சட்ட ரீதியான நடவடிக்கை பாயுமென எச்சரிக்கும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.