ஆவடி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 90 ஆயிரம் சிக்கியது
ஆவடி:
ஆவடி புதிய ராணுவ சாலையில் பழைய நகராட்சி அலுவலகத்தில் தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது.
இங்கு பட்டா வழங்க பொது மக்களிடமிருந்து லஞ்சம் வாங்கப்படுவதாகவும் அலுவலகத்தில் புரோக்கர்கள் அதிக அளவில் செயல்படுவதாகவும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் இருந்து டி.எஸ்.பி. குமரகுரு தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஆவடியில் உள்ள தனி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர்.
அலுவலகத்தை சாத்தினார்கள். உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் பட்டா விவரங்கள் உள்ளிட்டவற்றையும் பணம் ஏதாவது பெறப்பட்டதா எனவும் சோதனை செய்தனர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றது.
அப்போது கணக்கில் வராத ரூ. 90 ஆயிரம் பணம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.