செய்திகள்
ஆட்டையாம்பட்டி அருகே புதுமாப்பிள்ளை விபத்தில் பலி
ஆட்டையாம்பட்டி அருகே புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனமரத்துப்பட்டி:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சென்னகிரி ஊராட்சி சாணார் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் கோகுல் (வயது 22). டிப்ளமோ பட்டதாரியான இவர் சேலத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர் தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கோகுல் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஆட்டையாம்பட்டியில் இருந்து சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆட்டையாம்பட்டி அருகே பாலம்பட்டி பஸ் நிறுத்தத்தை அடுத்து சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை முந்திச் செல்ல அவர் முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்த கோகுலின் மீது பஸ்சின் பின்பக்க டயர் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.