தஞ்சை அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய்கள் தீ வைத்து எரிப்பு
வல்லம்:
மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலமாக நாகப்பட்டினம் மாவட்டம் பரிமளத்தில் இருந்து திருச்சி மாவட்டம் துவாக்குடி வரை எரிபொருள் கொண்டு செல்வதற்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வல்லம் அருகே உள்ள குருங்குளம் மேல்பாதி, திருக்கானூர்ப்பட்டி உள்ளிட்ட இடங்களில் தற்போது குழாய் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. இதற்காக ஏழுப்பட்டியில் இருந்து குருங்குளம் செல்லும் சாலையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தின் அருகே இரும்பு குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
நேற்று மர்மநபர்கள் சிலர் எரிபொருள் கொண்டு செல்வதற்காக பதிக்க வைக்கப்பட்டிருந்த குழாய்களுக்கு தீ வைத்துள்ளனர். இதில் குழாய்கள் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கட்டுமான மேலாளர் அஜித்குமார் (வயது32) வல்லம் போலீசில் புகார் அளித்தார்.
எரிந்து போன குழாய்களின் மதிப்பு ஒரு லட்சத்து 3 ஆயிரம். இது குறித்து வல்லம் போலீசார் வழக்குபதிவு செய்து குழாய்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.