லைஃப்ஸ்டைல்
சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?

சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?

Published On 2021-03-09 08:56 GMT   |   Update On 2021-03-09 08:56 GMT
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை காலம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் உள்ள தர்பூசணி மற்றும் குளிர்பானங்களை அருந்தி வெப்பத்தை தணித்து வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் மனிதனுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உடுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது தொப்பி அல்லது குடை, கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர், தர்பூசணி மற்றும் ஓ.ஆர்.எஸ். கலவை நீர் ஆகியவற்றை அருந்த வேண்டும்.

குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை வெப்ப தாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்க வேண்டும். வீட்டில் பகல் நேரங்களில் திரைச்சீலைகள், கூடாரங்கள், மறைப்பான்கள் ஆகியவற்றால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்தும் காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருக்குமாறும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

வெட்ட வெளியில் பணியாற்றுபவர்கள் ஈரமான உடைகளை பயன்படுத்த வேண்டும். கடும் வெயில் நேரத்தில் (மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை) சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும். கால்நடைகளை (ஆடு, மாடு) நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும்.

வெயில் நேரத்தில் சமைப்பதை தவிர்க்கவும். அடர் வண்ணம் கொண்ட (குறிப்பாக கருமை வண்ண) ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. வெயிலில் கடுமையான பணிகளை செய்யக்கூடாது. உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காபி, தேநீர் மற்றும் மது ஆகியவற்றை அருந்தக்கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழவகைகளை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News